ரேஷன் கடை அரிசியில் வண்டு, புழு; கூவத்தூர் மக்கள் புகார்

0
8

கூவத்தூர் அருகிலுள்ள கடலூர் ஊராட்சியில் செயல்படும் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். குறிப்பாக தொடர்ந்தார்பேட்டை, வவ்வால்குட்டை ஆதிதிராவிடர் பகுதி, வேப்பஞ்சேரி மற்றும் மூன்று மீனவ கிராமங்களில் இயங்கும் ரேஷன் கடைகள் தொடர்பாக இந்த புகார் எழுந்துள்ளது.

பொதுமக்கள் கூறுவதாவது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி வண்டு மற்றும் புழுக்கள் தாக்கிய நிலையில் இருப்பதாகவும், உணவுக்குத் தகுதியற்ற தரத்தில் இருப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். அதே நேரத்தில், தரமான அரிசி வெளியில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேட்டபோது, “பணம் கொடுத்தால் நல்ல தரமான அரிசி கிடைக்கும், இலவச அரிசி எப்படியிருந்தாலும் பரவாயில்லை” என்ற அலட்சியமான பதில் வழங்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உணவுப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.