பக்ரீத் பண்டிகை, முகூர்த்த நாட்கள் மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடுதல் பயணிகள் நெரிசலை சமாளிக்க தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக பண்டிகை காலம், திருமண முகூர்த்த நாட்கள் மற்றும் தொடர் விடுமுறைகள் காரணமாக பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதிகாரிகள் தெரிவித்ததாவது, நேற்று மட்டும் 475 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், இன்று 845 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் கூறினர்.
மேலும், அடுத்த மூன்று நாட்களுக்கும் தினமும் கூடுதலாக 455 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பயணிகள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பேருந்து நிலையத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
பயணிகள் முன்பதிவு வசதியை பயன்படுத்திக் கொள்ளவும், தேவையற்ற நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே பேருந்து நிலையத்திற்கு வரவும் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு, பயணிகளின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் மக்கள் பாதுகாப்பாகவும், சிரமமின்றியும் பயணம் செய்ய இந்த நடவடிக்கை உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
