மதுராந்தகம் அருகே கருங்குழி பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு காரணமாக துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கருங்குழி பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டதாகும். இதில் 4வது வார்டுக்கு உட்பட்ட பெரியபாளையத்தம்மன் கோவில் குளம் அருகே செல்லும் கழிவுநீர் கால்வாய் பராமரிப்பின்றி காணப்படுகிறது.
மதுராந்தகம் – திருக்கழுக்குன்றம் நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள இந்த கால்வாயில் புல், செடிகள் மற்றும் குப்பைகள் அதிகளவில் தேங்கியுள்ளதால் கழிவுநீர் சரியாக வெளியேற முடியாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து, பெரியபாளையத்தம்மன் கோவில் குளம் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.





