சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் காலவாக்கம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒசூர் பகுதியைச் சேர்ந்த விக்ரம் (28), நேற்று அதிகாலை தனது ராயல் என்பீல்டு பைக்கில் திருப்போரூர் வழியாக காலவாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ரவுண்டானா தடுப்பு சுவரில் எதிர்பாராத விதமாக பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட விக்ரமுக்கு தலை, முகம் மற்றும் காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விக்ரமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
