இந்தியாவில் சர்க்கரையின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவும் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இந்தத் தடையானது வரும் செப்டம்பர் 30, 2026 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநரகம் (DGFT) நேற்று (மே 13) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, சர்க்கரை ஏற்றுமதி கொள்கை “கட்டுப்படுத்தப்பட்ட” (Restricted) பிரிவிலிருந்து “தடைசெய்யப்பட்ட” (Prohibited) பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்பட்டதை விடக் கரும்பு விளைச்சல் குறைவாக இருக்கும் என்ற அச்சம் மற்றும் ‘எல் நினோ’ (El Niño) பருவநிலை மாற்றத்தால் பருவமழை பாதிக்கப்படலாம் என்ற கணிப்புகள் நிலவுகின்றன. இதனால், எதிர்காலத்தில் சர்க்கரை தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கவும், உணவுப் பொருட்களின் விலையேற்றத்தைத் தடுக்கவும் மத்திய அரசு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்தத் பொதுவான ஏற்றுமதி தடையிலிருந்து அமெரிக்கா (USA) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகியவற்றிற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா ஏற்கனவே இவர்களுடன் செய்துகொண்ட ‘CXL’ மற்றும் ‘TRQ’ ஒதுக்கீடு ஒப்பந்தங்களின் கீழ் (சுமார் 14,500 டன்) சர்க்கரை ஏற்றுமதி செய்ய மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற ‘அட்வான்ஸ் ஆதரைசேஷன்’ (Advance Authorization) திட்டத்தின் கீழ் செய்யப்படும் ஏற்றுமதிகள்.
உணவுப் பாதுகாப்பிற்காக அரசுக்கு அரசு (G2G) முறையில் செய்யப்படும் ஒப்பந்தங்கள்.
இந்த அறிவிப்பு வருவதற்கு முன்பே கப்பலில் ஏற்றப்பட்ட அல்லது சுங்கச் சாவடிகளில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட சரக்குகள்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பங்குச்சந்தையில் சர்க்கரை ஆலை நிறுவனங்களின் பங்குகள் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. சர்வதேசச் சந்தையில் சர்க்கரை விலையில் இது மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், இந்திய நுகர்வோருக்குச் சர்க்கரை நியாயமான விலையில் கிடைப்பதை இது உறுதி செய்யும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
