Home Trending/Viral திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்!

0

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகப் பேசியுள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமாரின் கருத்து, பல கோடி ஆன்மீகப் பக்தர்களின் உணர்வுகளைக் கசக்கிப் பிழியும் செயல்” என்று பல்வேறு ஹிந்து அமைப்புகள் தங்களது கடுமையான கண்டனங்களை அனல் பறக்கப் பதிவு செய்து வருகின்றன.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவுகளுக்கு எதிராகத் தவெக அரசு தற்பொழுது மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு விசாரித்து வரும் சூழலில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், “திருப்பரங்குன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்ன நிலைமை நிலவியதோ, அதுவே தொடரும்; எந்தவொரு மதவாத சக்தியும் உள்ளே நுழைந்து அரசியல் செய்ய 100 சதவீதம் அனுமதிக்க மாட்டோம்” என்று தமிழக அரசின் கொள்கை நிலைப்பாட்டை உறைப்பாகத் தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் முழு ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், தென் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆன்மீக மற்றும் ஹிந்து அமைப்புகள் தற்பொழுது போர்க்கொடி தூக்கியுள்ளன.

நீதிமன்றமே உத்தரவிட்ட பின்பும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் விளக்கு ஏற்ற மாட்டோம் என்று ஒரு சட்டத்துறை அமைச்சரே பொதுவெளியில் முரண்பாடான வாதங்களை முன்வைப்பது அப்பட்டமான சட்ட மீறலாகும். ஆண்டாண்டு காலமாகப் பாரம்பரிய முறைப்படி அப்பகுதி மக்களின் வாழ்வியலோடு கலந்துவிட்ட உன்னதமான ஆன்மீக வழிபாட்டுத் தார்மீக உரிமையைத் திட்டமிட்டுத் தடுப்பதோடு, தங்களது உரிமைகளுக்காகப் போராடும் பொதுமக்களின் தூய ஆன்மீக உணர்வுகளை ‘மதவாத Fringe Elements’ என்று கொச்சைப்படுத்துவது அநாகரீகத்தின் உச்சம்.

ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கிக்காகவும், கூட்டணிக் கட்சிகளின் தாளத்திற்கு ஏற்பவும் தவெக அரசு செயல்படுவதைத் நிறுத்திக் கொள்ள வேண்டும். மக்களின் ஆன்மீக நம்பிக்கைகளை மதிக்காமல் தறிகெட்டுச் செயல்பட்டதால் தான் கடந்த தேர்தலில் திமுக அசிங்கமாக ஆட்சியை இழந்தது என்பதைப் புதிய முதலமைச்சர் விஜய் அவர்களின் தவெக அரசுக்கு நினைவூட்டுகிறோம். எனவே, நீதிமன்ற உத்தரவிற்கு எதிராகத் தொடர்ந்து பிடிவாதம் பிடிக்காமல், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் அரசு உடனடியாகச் செய்து தர வேண்டும்; இல்லையெனில் மாநிலம் தழுவிய அளவில் மாபெரும் ஆன்மீகப் போராட்டங்கள் வெடிக்கும் என்று ஹிந்து அமைப்புகள் கறாராக எச்சரித்துள்ளன.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று 30 நாட்களே ஆகியுள்ள சூழலில், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் அமைச்சரின் கருத்துக்கு எதிராக ஹிந்து அமைப்புகள் அசுர வேகத்தில் திரண்டு வருவது கோட்டை வட்டாரத்திலும், தென் மாவட்ட அரசியல் மேடைகளிலும் தற்பொழுது மாபெரும் பரபரப்பையும் அனல் பறக்கும் விவாதப் புயலையும் கிளப்பியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version