கூடுவாஞ்சேரி காவல் நிலையம் அருகே, பழைய காவலர் குடியிருப்பு பகுதியில் இரண்டு நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் காவலர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகே, கூடுவாஞ்சேரி காவல் நிலையம் அமைந்துள்ளது. அதன் அருகே கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையம், புதிய மற்றும் பழைய காவலர் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் பழைய காவலர் குடியிருப்பு அமைந்திருக்கும் பகுதியில், நீண்ட காலமாக பூட்டி இருந்த வீட்டின் பூட்டை உடைத்து, கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவலர் சரவணன் வீட்டை சுத்தம் செய்துள்ளார். சரவணன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், போக்குவரத்து காவலராக பணியாற்றி வருகிறார்
அப்பொழுது பரண் மீது சரவணன் சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது மேலே ஒரு பொருள் இருந்துள்ளது. அது திடீரென கீழே விழுந்து வெடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியில் அங்கிருந்து சரவணன் கீழே விழுந்துள்ளார். மர்ம பொருள் வெடித்ததில் காவலர் குடியிருப்பு கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. கீழே விழுந்த காவலர் சரவணன் கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சரவணன் தற்பொழுது பொத்தேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவலர் குடியிருப்பில் வெடித்த மர்ம பொருள் நாட்டு வெடிகுண்டு என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காவலர் குடியிருப்பு பகுதிக்கு எப்படி நாட்டு வெடிகுண்டு சென்றது? யார் அங்கே கொண்டு சென்றார்கள்? என்ற கோணத்தில் தற்பொழுது கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
