எடையாளம்: நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் எதிர்ப்பு

0
3

அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட எடையாளம் ஊராட்சியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் சென்றபோது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

எடையாளம் ஊராட்சியில் சர்வே எண் 23/1 பகுதியில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி, அதே பகுதியைச் சேர்ந்த திருமால் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கவிதா, வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று சம்பவ இடத்துக்கு வந்தனர். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற ஜேசிபி இயந்திரங்களும் கொண்டு வரப்பட்டிருந்தன.

ஆனால், அப்பகுதி மக்கள் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. பின்னர் நிலைமையை சமாளித்த அதிகாரிகள், பொதுமக்களின் கோரிக்கையை பரிசீலித்து அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.