தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி இன்று தனது தொகுதியில் அதிரடிப் பிரசாரத்தை மேற்கொண்டார். ஆத்தூர் ஊராட்சிக்கு வருகை தந்த அவருக்கு, தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு அந்தப் பகுதியையே விழாக்கோலமாக மாறியது.
தமிழகத்தில் ஏப்ரல் 23-ல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், திமுக வேட்பாளரின் இந்த எழுச்சியான பிரசாரம் செங்கல்பட்டு தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.
ஆத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் கௌதம் தலைமையில் திரண்டிருந்த தொண்டர்கள், 3 ஜேசிபி (JCB) இயந்திரங்கள் மூலம் வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி மீது மலர்களைத் தூவி உற்சாகமாக வரவேற்றனர். கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் சுமார் 20 அடி உயரமுள்ள பிரம்மாண்ட மாலையை வேட்பாளருக்கு அணிவித்துத் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
ஊர் எல்லையில் திரண்டிருந்த ஏராளமான பெண்கள், வேட்பாளருக்குப் பாரம்பரிய முறைப்படி ஆரத்தி எடுத்து, திலகமிட்டுத் தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். ஆத்தூரைத் தொடர்ந்து வீராபுரம், தென்மேல்பாக்கம் மற்றும் குண்ணவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் வீதி வீதியாகச் சென்று கார்த்திக் தண்டபாணி வாக்கு சேகரித்தார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் நலத்திட்டங்களைக் கருத்தில் கொண்டு எனக்கு வாக்களிக்க வேண்டும். பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணம், கலைஞர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளன” என அவர் பேசினார். செங்கல்பட்டு தொகுதி மக்களின் நீண்ட காலத் தேவைகளை அறிந்து, அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றப் பாடுபடுவேன் என அவர் உறுதியளித்தார்.
