மறைமலை நகர் அடுத்த சட்டமங்கலத்தில் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஆட்சியர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.
சட்டமங்கலத்தில் மாவட்டத்தின் முதலாவது மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மொத்தம் 114 மாணவர்கள் பயில்கின்றனர்.
இங்கு பயிலும் மாணவர்களில் 5 பேர் தமிழக முதலமைச்சரின் திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர். விளையாட்டு போட்டிகளில் வட்டார அளவில் 59 மாணவர்களும், மாவட்ட அளவில் 6 பேரும் முதலிடம் பிடித்து உள்ளனர். நாட்டுப்புற நடன போட்டியில் 12 மாணவர்கள், மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு ஆட்சியர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து, 10ம் வகுப்புதேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுத்த இப்பள்ளியை சேர்ந்த ஸ்ரீலேகா என்ற மாணவியை பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
