தமிழக மக்களிடம் அவகாசம் கேட்டார் விஜய்: நிதிநிலை பற்றி வெள்ளை அறிக்கை!

0
3

தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற கையோடு, நேரு உள்விளையாட்டு அரங்கில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் முதல்வர் விஜய் தனது கன்னி உரையை நிகழ்த்தினார். ஒரு கட்சியின் தலைவராக இருந்தபோது பேசியதை விட, ஒரு முதலமைச்சராக அவர் ஆற்றிய முதல் உரை அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.

தனது உரையின் தொடக்கத்திலேயே கடந்த கால திமுக ஆட்சியை மிகக் கடுமையாக முதல்வர் விஜய் விமர்சித்தார். தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதற்கு முந்தைய அரசு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் கடனை தமிழக மக்கள் தலையில் வைத்துவிட்டுச் சென்றுள்ளது” என அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

தமிழக அரசின் உண்மையான நிதி நிலை என்ன என்பதை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், விரைவில் விரிவான ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் என அவர் அதிரடியாக அறிவித்தார். திமுகவை மட்டுமல்லாது, அதிமுகவையும் அவர் விட்டுவைக்கவில்லை. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் காலத்து அரசியல் நகர்வுகளைச் சுட்டிக்காட்டும் வகையில்:

“நான் யாருக்கும் பயந்து முகத்தை மூடிக்கொண்டு (Mask) சென்று ஒளிந்து மறைந்து யாரையும் சந்திக்க மாட்டேன். எல்லாவற்றையும் வெளிப்படையாகவே செய்வேன்” என அதிமுகவின் கடந்த காலச் சம்பவங்களை மறைமுகமாகச் சாடினார்.

அரசியல் விமர்சனங்களுக்குப் பிறகு மக்களின் நலன் குறித்து அவர் பேசியதாவது, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்குத் தனது அரசு மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கும். அவர்கள் அச்சமின்றி வாழும் சூழல் உருவாக்கப்படும்.

இத்தனை ஆண்டுகாலச் சிதைவுகளைச் சரிசெய்ய சிறிது காலம் எடுக்கும். தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற எனக்குச் சற்று கால அவகாசம் கொடுங்கள் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். தனது முதல் உரையிலேயே எதிர்க்கட்சிகள் என இருதரப்பையும் ஒரு கை பார்த்த முதல்வர் விஜய்யின் பேச்சு, தமிழக அரசியலில் ஒரு புதிய ‘அக்னிப் பரீட்சை’ தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது.