செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுலா மாளிகை கட்டடப் பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் இருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, 2019ம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டது. இங்கு, புதிய ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு, கலெக்டர் அலுவலகம், வருவாய்த்துறை உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
தொடர்ந்து, அரசுத்துறை உயரதிகாரிகள் மற்றும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்குவதற்காக, சுற்றுலா மாளிகை கட்ட, 2022ஆம் ஆண்டு, ரூ.6.79 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இப்பணிக்கு, டெண்டர் விடப்பட்டு, அதே ஆண்டு அக்டோபர் மாதம், தனியார் ஒப்பந்ததாரர்கள் பணிகளை தொடங்கினர்.
இந்த கட்டடம் 6,133 சதுர அடியில் கட்டப்பட்டது. இதில், எட்டு அறைகள் மற்றும் கூட்ட அரங்கு உள்ளிட்டவை அமைந்துள்ளன. அனைத்து பணிகளும் முடிந்து, கட்டடம் திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. இந்த கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
