செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், சகோதரி மகன் தாக்கியதில் கட்டிடத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அச்சரப்பாக்கம் அருகே உள்ள மதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (35). இவர் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கார்த்திக் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்வது வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று கார்த்திக் மீண்டும் மது போதையில் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரது சகோதரி மகன் ஆகாஷுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஆகாஷ் அருகில் இருந்த செங்கல்லால் கார்த்திக்கின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று (மே 26) உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு கொலை வழக்காக மாறிய இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
