சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஸ்தம்பித்த போக்குவரத்து – 3 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்!

0
5

வார விடுமுறை நிறைவடைந்ததை அடுத்து, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி ஏராளமான மக்கள் பயணம் மேற்கொண்டதால், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் இருந்து அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், கார்கள் மற்றும் பிற வாகனங்கள் மூலம் சென்னையை நோக்கி பொதுமக்கள் பெருமளவில் புறப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் கீழக்கரணை முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை சுமார் 3 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று ஆமை வேகத்தில் நகர்ந்தன.

சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் முறையான பேருந்து நிறுத்த வசதி இல்லாததால், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் சாலையின் ஓரங்களிலும் சில நேரங்களில் நடுப்பகுதியிலும் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றி இறக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுவே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதிய அளவில் போக்குவரத்து காவல்துறையினர் இல்லாததும் நெரிசலை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த கடுமையான நெரிசலால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்கள்கூட சிக்கித் தவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.