கத்திரி வெயில் உச்சம்: டாக்டர்கள் எச்சரிக்கை

0
2

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பகல் நேரங்களில் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கத்திரி வெயில் தாக்கத்தால் நண்பகல் நேரங்களில் வெப்ப அலை கடுமையாக வீசுகிறது. இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள், குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க மாநகராட்சி சார்பில் முக்கிய சிக்னல் சந்திப்புகளில் நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டாலும், மக்கள் சிரமம் தொடர்ந்து நீடிக்கிறது.

அதிக வெப்பத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, கடுமையான தலைவலி, கால் தசை பிடிப்பு, வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், நெஞ்சு படபடப்பு மற்றும் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முதியோர், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வராமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே 4ஆம் தேதி தொடங்கிய கத்திரி வெயில், வரும் மே 28ஆம் தேதி வரை நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.