சென்னையில் பிறப்புச் சான்றிதழ் வாட்ஸ் ஆப்பில்!

0
2

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் இனி பெற்றோரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு நேரடியாக அனுப்பப்படும் என மாநகராட்சி ஆணையாளர் J. Kumaragurubaran தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு அரசு சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்ந்து பல்வேறு டிஜிட்டல் சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் தற்போது நேரடியாக வாட்ஸ் ஆப் மூலம் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளம் வாயிலாக மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. தற்போது தமிழ்நாட்டில் முதல்முறையாக, மாநகராட்சிக்குட்பட்ட மருத்துவமனைகளில் குழந்தை பிறக்கும் போது பதிவு செய்யப்படும் பெற்றோரின் கைபேசி எண்ணின் வாட்ஸ் ஆப்பிற்கு, குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் PDF வடிவில் அனுப்பி வைக்கப்படும்.

மேலும், பெற்றோர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் வாட்ஸ் ஆப் சாட்பாட் சேவையையும் பயன்படுத்தி பிறப்புச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக 94450 61913 என்ற எண்ணில் தொடர்புகொண்டு, குழந்தை பிறப்பின் போது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணை பயன்படுத்தி தேவையான விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இந்த புதிய வசதி மூலம் பெற்றோர்கள் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே பிறப்புச் சான்றிதழை எளிதாகப் பெற முடியும் என்பதால் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.