சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கம் பகுதியில் உள்ள Tech Mahindra நிறுவனத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை OMR சாலையில் இயங்கி வரும் இந்த பிரபல ஐடி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அலுவலக வளாகத்தில் கரும்புகை சூழ்ந்ததால், அங்கிருந்த ஊழியர்கள் பதற்றமடைந்தனர்.
தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிடத்திற்குள் இருந்த ஐடி ஊழியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதே நேரத்தில், தீ மேலும் பரவாமல் தடுக்க தீயணைப்பு வீரர்கள் பல்வேறு உபகரணங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தால் காரப்பாக்கம் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சம்பவத்தின் உண்மையான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





