செங்கல்பட்டு முதல் நிலை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவடைந்த பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
6.09 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 33 வார்டுகளை கொண்ட செங்கல்பட்டு நகராட்சியில் 614.67 கிலோமீட்டர் நீள சாலைகள் மற்றும் 62.67 கிலோமீட்டர் நீள வடிகால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஜே.சி.கே நகர், நத்தம், மேட்டுத்தெரு, பெரியமணியக்கார தெரு, வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி, அழகேசன் நகர், குண்டூர் மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 485க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.
இப்பகுதிகளில் வீடுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைநீர் கால்வாய்களில் கலந்ததால் கொசு உற்பத்தி அதிகரித்து, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, கடந்த ஆண்டு ரூ.188.25 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியது. தற்போது வேதாசலம் நகர் மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் நிறைவடைந்துள்ளன.
அதனை தொடர்ந்து 10.215 கிலோமீட்டர் நீளத்தில் புதிய தார் சாலை அமைக்க 2025-26 நிதியாண்டில் ரூ.6.05 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது வேதாசலம் நகர், தேவராஜன் தெரு மற்றும் வரதனார் தெருக்களில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.





