விசிக தலைவர் திருமாவளவன் அளித்த பரபரப்பான பேட்டி தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சில முக்கிய அரசியல் தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “இரு பெரிய கட்சிகள் இணைந்து என்னை முதலமைச்சராக ஆக்க முயற்சி செய்ததாக தகவல் வந்தது. எங்களை நேரடியாக அணுகினார்கள். ஆனால் அதற்கு நாங்கள் உடன்படவில்லை,” என தெரிவித்தார்.
மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில், தவெக அமைச்சரவையில் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்த விவாதம் மட்டுமே நடைபெற்றதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
விஜய் தலைமையிலான புதிய அரசை பற்றியும் கருத்து தெரிவித்த அவர், “முதலமைச்சர் விஜய் அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது அரசியல் முதிர்ச்சியின் அடையாளம். தேர்தல் நேரத்தில் கடுமையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், அவரது இந்த அணுகுமுறை மக்களிடையே நம்பிக்கையை உருவாக்கியுள்ளது,” என்றார்.
மேலும், “மதச்சார்பற்ற சக்திகளோடு இணைந்து ஆட்சி அமைக்க விரும்புகிறோம் என்று விஜய் எடுத்த முடிவும், எங்களை போன்ற கட்சிகளுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்ததும் அவரது இன்னொரு பரிமாணத்தை காட்டுகிறது,” என பாராட்டினார்.
அமைச்சரவை பங்கேற்பு குறித்து பேசும்போது, “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதையே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் வெளியில் இருந்து ஆதரவு வழங்குவது தான் சரியான முடிவாக இருந்தது,” என தெரிவித்தார். மேலும், “ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு இன்னொரு கட்சிக்கு ஆதரவு தெரிவித்தது குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காக தான்,” என்றும் அவர் கூறினார்.
திமுக குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “பத்தாண்டுகளுக்கும் மேலாக இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளோம். திமுகவின் கருத்துகளை உடனடியாக புறக்கணிக்க முடியாது,” என பதிலளித்தார்.




