
பஞ்சாப் மாநில அரசியலில் நிலவி வரும் அதிரடி கட்சித் தாவல் விவகாரம், தற்போது கிரிக்கெட் வீரரும் மாநிலங்களவை எம்.பி-யுமான ஹர்பஜன் சிங்கின் வீட்டு வாசலில் போராட்டமாக உருவெடுத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியிலிருந்து (AAP) விலகி பாரதிய ஜனதா கட்சியில் (BJP) இணைந்ததற்காக, ஹர்பஜன் சிங்கை ‘துரோகி’ எனச் சித்தரித்து அவரது வீட்டுச் சுவர்களில் அக்கட்சித் தொண்டர்கள் கறுப்பு மையால் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகவ் சதா மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 7 மாநிலங்களவை எம்.பி-க்கள் சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இந்தச் செயலை “மன்னிக்க முடியாத துரோகம்” எனப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சாடியிருந்தார். இதற்கிடையில், ஜலந்தரில் உள்ள ஹர்பஜன் சிங்கின் வீட்டின் முன் திரண்ட ஆம் ஆத்மி தொண்டர்கள், நேற்று இரவு தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் தங்களது கண்களில் கறுப்புத் துணிகளைக் கட்டிக்கொண்டு “துரோகி ஹர்பஜன் சிங்” என முழக்கமிட்டதோடு, அவரது வீட்டின் வெளிச் சுவர்களில் கறுப்பு மையால் அவதூறு வாசகங்களை எழுதினர்.
இந்தச் சம்பவத்தின் போது ஹர்பஜன் சிங் வீட்டில் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு ஆம் ஆத்மி சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹர்பஜன் சிங், பதவிக்காலம் முடிவதற்குள் கட்சி மாறியிருப்பது பஞ்சாப் மக்களிடையே கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு கருதி அவரது இல்லத்திற்கு வெளியே தற்போது கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ராகவ் சதா ஏற்கனவே தனது சமூக வலைதளப் பக்கத்தில் 10 லட்சம் ஃபாலோயர்களை இழந்த நிலையில், ஹர்பஜன் சிங்கிற்கு எதிரான இந்தப் போராட்டங்கள் பஞ்சாபில் ஆம் ஆத்மி – பாஜக இடையிலான அரசியல் மோதலை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.




