வனவிலங்குகள் பாதுகாப்பை முன்னிறுத்தி, சாலைப் பாதுகாப்பு முறைகளில் புதிய மாற்றத்தை கொண்டு வர இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்னெடுத்துள்ள முயற்சி கவனம் ஈர்த்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-45 (NH-45) பகுதியில் இந்தியாவின் முதல் ‘சிவப்பு நிற’ சாலை அமைக்கப்பட்டுள்ளது.
சாகர் மற்றும் ஜபல்பூர் நகரங்களுக்கு இடையே, வீராங்கனை துர்காவதி புலிகள் காப்பகத்தை கடக்கும் சுமார் 2 கிலோமீட்டர் நீளமுள்ள வனப்பகுதியில் இந்த சாலை உருவாக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடக்கும் பகுதியாக இது அடையாளம் காணப்பட்டதால், விபத்துகளை குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சாலையின் முக்கிய அம்சமாக சிவப்பு நிற ‘டேபிள்-டாப்’ அமைப்பு குறிப்பிடப்படுகிறது. தெர்மோபிளாஸ்டிக் பொருளால் செய்யப்பட்ட இந்த சிவப்பு படலம், சாலையின் மேற்பரப்பை விட சற்றே உயரமாக (சுமார் 5 மில்லிமீட்டர்) வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான வேகத்தடையாக இல்லாமல், ஓட்டுநர்களின் கவனத்தை ஈர்க்கும் உளவியல் அடிப்படையிலான பாதுகாப்பு முறையாகும்.
நிபுணர்கள் கூறுவதாவது, சிவப்பு நிறம் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தி, தன்னிச்சையாகவே வேகத்தை குறைக்க தூண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் வாகன ஹெட்லைட் இந்த சிவப்பு மேற்பரப்பில் பிரதிபலிக்கும் போது, அது மேலும் தெளிவாக தெரிந்து கவனச்சிதறலை தவிர்க்க உதவுகிறது.
மேலும், நவீன வாகனங்களில் பயன்படுத்தப்படும் ADAS (Advanced Driver Assistance Systems) போன்ற தொழில்நுட்பங்களுக்கு இந்த சிவப்பு சாலை பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் விளக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள் நிறத்தை மட்டும் அல்லாமல் சாலையின் விளிம்புகள் மற்றும் ஒளி மாறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதால், பாதுகாப்பு அம்சங்கள் தொடர்ந்து செயல்படும் என நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதற்குபிறகும், வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சுமார் 25 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையின் இருபுறங்களிலும் வேலிகள் அமைக்கப்பட்டு, விலங்குகள் சுரங்கப்பாதைகள் வழியாகவே கடக்கும்படி வழிநடத்தப்படுகின்றன.
மொத்தத்தில், இந்த சிவப்பு சாலை திட்டம் சாலைப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் முன்னோடியான முயற்சியாக மதிக்கப்படுகிறது.





