திருநீர்மலை கோயிலுக்கு கம்பிவட ஊர்தி அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில் சட்டசபையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். முன்னதாக இந்தியாவின் 2வது பெரிய பொருளாதாரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வழிகாட்டிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி எனக் கூறி பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார்.
அப்போது பல அறிவிப்புகளை வெளியிட்ட அவர், செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலை கோயிலுக்கும், மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கும் ரூ.26 கோடி மதிப்பில் கம்பிவட ஊர்தி அமைக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோவில்களில் திருப்பணிகள் செய்திட இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.








