அச்சிறுப்பாக்கத்தில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் முழு உருவச் சிலையுடன் கூடிய இரட்டை மலை சீனிவாசன் நினைவு மண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த கோழியாளம் என்ற கிராமத்தில் பிறந்தவர் இரட்டைமலை சீனிவாசன். இவர், பட்டியலின மக்களின் பல்வேறு உரிமைகளுக்காக போராட்டங்களில் ஈடுபட்டவர்.
இந்நிலையில், இரட்டைமலை சீனிவாசனுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில், கடந்த 2018-19ஆம் ஆண்டு ரூ.1.35 கோடி மதிப்பில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, வருவாய்த் துறை மூலம் 1 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. மேலும் ரூ.82 லட்சத்தில் சுற்று சுவர் உள்ளிட்ட இதர பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் இரட்டைமலை சீனிவாசனின் முழு உருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் 4,300 சதுர அடியில் கட்டி முடிக்கப்பட்டது.
முழு உருவ வெங்கல சிலையுடன் கூடிய இந்த நினைவு மண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். இதில் திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.








