சிங்க பெருமாள் கோயில் அருகே நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் முக்கிய கோயில்களில் ஒன்றாக அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் உள்ளது. இக்கோவில் ஒரு குடவரைக் கோயிலாகும். பெருமாளின் திருமேனியே மலையாக விளங்குவதால் நாம் மலையைச்சுற்றி வலம் வர வேண்டும். பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பிரம்மோற்சவம் பெருவிழா மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன், கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர்கால குடைவரைக்கோயிலில் திருவிழா இன்று 13ஆம் தேதி தொடங்கி, வரும் 27ஆம் தேதி வரை மொத்தம் 15 நாட்கள் நடைபெறும் .
அந்த வகையில் இன்று கோயிலில் வேத மந்திரங்கள் முழங்க மேளதாளங்களுடன் கொடியேற்றப்பட்டது. பின்பு அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் நரசிம்ம பெருமாள், கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்வில் சிங்க பெருமாள் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.








