தூய்மையை வலியுறுத்தும் விதமாக பொதுமக்களுக்கு நூதனமான முறையில் விழிப்புணர்வு செய்வதற்காக, நகரமன்றத் தலைவர் எம்.கே.டி கார்த்திக் சில போட்டிகளை அறிவித்துள்ளார்.
கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. நகராட்சி முழுவதிலும் தூய்மையாக வைத்துக்கொள்ள பல்வேறு அறிவிப்பு பலகைகள் மற்றும் ஆங்காங்கே மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நகர மன்ற தலைவர் எம்.கே.டி கார்த்திக் பொதுமக்களிடம் நூதன முறையில் விழிப்புணர்வு செய்வதற்காக சில போட்டிகளை அறிவித்துள்ளார்.
நம் நகரம் நம் தூய்மை என்ற தலைப்பில் உங்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு அதை என் whatsapp நம்பருக்கு அனுப்புங்கள். முதலில் வெற்றி பெறும் மூன்று நபர்களுக்கு சைக்கிள் வழங்கப்படும் எனவும், போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து பெண்களுக்கும் நிச்சயம் பரிசு வழங்கப்படும் என அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் கூடுவாஞ்சேரியில் உள்ள 1500க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது வீட்டு வாசலில் கோலமிட்டு அதை நகர மன்ற தலைவர் எம்.கே.டி கார்த்திக் whatsapp எண்ணிற்கு அனுப்பி வைத்தனர்.
இதில் வெற்றி பெற்ற முதல் மூன்று நபர்களுக்கு சைக்கிளும், அடுத்த மூன்று நபர்களுக்கு பட்டுப்புடவை வழங்கப்பட்டது. மேலும், போட்டியில் பங்கேற்ற 1,716 பெண்களுக்கு தலா 5 கிராம் வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டது. அதேபோல சிறுவர்கள் சிறுமிகளுக்கும் நம் நகரம் நம் தூய்மை என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற முதல் 3 நபர்களுக்கு சைக்கிளும் வழங்கப்பட்டது. நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய நகர மன்ற தலைவர் எம்.கே.டி கார்த்திக் அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.








