2023ஆம் ஆண்டின் சுத்தமான நகரம் – மறைமலை நகர் நகராட்சி முதலிடம்

0
2

2023ஆம் ஆண்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலில், தமிழ்நாட்டில் மறைமலைநகர் நகராட்சி முதலிடம் பிடித்துள்ளது.

`ஸ்வச் பாரத் அபியான்’ திட்டத்தின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்ட இதன்படி, தேசிய அளவில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை பல்வேறு பிரிவுகளின் கீழ், ஒவ்வோர் ஆண்டும், மத்தியவீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான தமிழகத்தின் தூய்மைநகரங்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 20 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 நகராட்சிகள், ஒரு மாநகராட்சி, 6 பேரூராட்சிகள் என 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இதில் மறைமலை நகர் நகராட்சி தரவரிசை பட்டியலில் முதல் இடமும், மதுராந்தகம் 57-வது இடமும், செங்கல்பட்டு 93-வது இடமும் பெற்றுள்ளன.

தாம்பரம் மாநகராட்சி 13-வது இடமும், பேரூராட்சிகளில் கருங்குழி 135-வது இடமும், திருப்போரூர் 208-வது இடமும், அச்சிறுபாக்கம் 308-வது இடமும், திருக்கழுக்குன்றம் 322-வது இடமும், மாமல்லபுரம் 369-வது இடமும், இடைக்கழிநாடு 540-வது இடமும் பிடித்துள்ளன.

மறைமலை நகர் நகராட்சி தமிழக அளவிலும் முதலிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. குப்பையை கையாளுதல், பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகித்தல், குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி செய்தல், தூய்மை பணியாளர்களின் பாதுகாப்புபோன்ற கொள்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, மேற்கண்ட தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.