பீலா வெங்கடேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ராஜேஷ் தாஸ் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் புகார் எழுந்தது. இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,500 ரூபாய் அபராதமும், பெண் எஸ்.பியை தடுத்து நிறுத்திய செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கோரி இருந்தார். ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்தநிலையில் ராஜேஷ் தாசின் மனைவி பீலா வெங்கடேசன், ராஜேஷ் தாஸிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தையூர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான பங்களாவிற்குள் ராஜேஷ் தாஸ் அத்துமீறி நுழைந்ததாக, பீலா வெங்கடேசன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ராஜேஷ்தாஸ் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து காவல் வாகனத்தில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு நீதிமன்றத்தில் நீதிபதி முன்னணியில் ஆஜர் படுத்தப்பட்டார். தொடர்ந்து தனக்கு உடல்நிலை சரியில்லை தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் . காவல்துறை மற்றும் ராஜேஷ் தாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் வாதங்களைக் கேட்ட நீதிபதி, ராஜேஷ்தாஸுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.








