செங்கல்பட்டில் போதையில் அதிவேகத்தில் காரை ஓட்டிச்சென்று இருசக்கர வாகனங்கள் மீது இடித்துவிட்டு நிற்காமல் சென்ற திமுக எம்.பி-யின் மகனை பொதுமக்கள் விரட்டிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாமல்லபுரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி ஹூண்டாய் கார் ஒன்று நேற்று நள்ளிரவு அதிவேகத்தில் சென்றது. திருக்கழுக்குன்றம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய கார் நிற்காமல் வேகமாகச் சென்றது.
கார் இடித்து தள்ளியதால் கீழே விழுந்தாலும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் காயமின்றி தப்பினர். இதைக் கண்ட சக வாகன ஓட்டிகள், காரை நிறுத்துமாறு கூறினர். ஆனால், அந்த கார் நிற்காமல் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்தவர்கள் காரை விடாமல் துரத்திச் சென்றனர்.
இன்னும் வேகமாக சென்ற கார், செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலம் அருகில் இருந்த இரும்புத் தடுப்பு மீது மோதி, நின்றது. அதை துரத்திச் சென்றவர்கள் காரை சூழ்ந்து கொண்டு காரில், மதுபோதையில் இருந்த இளைஞர்கள் மற்றும் பெண்களைப் பிடித்தனர். அத்துடன் அவர்களை செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், காரை ஓட்டிவந்த இளைஞர், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜனின் மகன் செந்தமிழன் என்பது தெரியவந்தது. அவர் பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் பல்கலையில், சட்டம் படித்து வருகிறார். வார இறுதி நாளை முன்னிட்டு தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் சென்று, மதுபோதையில் காரை ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








