சாத்தமங்கலம் கிராமத்தில், பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சாத்தமங்கலம் பகுதியில் பழைய கற்சிற்பம் உள்ளதாக, அவ்வூரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில், தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள் அங்கு சென்று கள ஆய்வு செய்தனர். அப்போது, வயல்வெளியில் மேடான பகுதியில், பாதி மண்ணில் புதைந்த நிலையில், பலகைக் கல்லால் ஆன புடைப்பு சிற்பம் இருப்பதை கண்டறிந்தனர்.
மண்ணை அகற்றி, சுத்தம் செய்து ஆய்வு செய்ததில், அது 5 அடி உயரம், 2.5 அடி அகலம் உடைய கொற்றவை சிற்பம் என்று தெரியவந்ததாக ஆய்வாளர் வடிவேல் தெரிவித்தார். இச்சிற்பத்தில், கொற்றவை நான்கு கைகளுடன் உள்ளார் என்றும், வலது மேல் கையில் தாமரை மொட்டும், இடது மேல் கையில் சங்கும் உள்ளது என்றும் தெரிவித்தார். வலது அடிக்கை ஆசீர்வாதம் செய்யும் வகையில் அபய நிலையிலும், இடது அடிக்கை இடுப்பில் ஊன்றி அடிஹஸ்த நிலையிலும் உள்ளதாகவும், தலையில் கரண்ட மகுடம் சூடி இருப்பதாகவும் கூறினார்.
சிற்றிடையில் ஆடையணிந்து, எருமை தலை மீது நின்ற கோலத்தில் காட்ச அளிக்கும் இந்த சிற்பம், பல்லவர்களின் கடைசி ஆட்சிக் காலமான, 9 அல்லது 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.








