செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி முருகர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 15ம் தேதி பொங்கல் பண்டிகையாக தை மாதம் பிறந்தது. இதையடுத்து, தைப்பூச கொண்டாட்டத்திற்கு முருக பக்தர்கள் தயாராகி வருகின்றனர். நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும் 25அஅம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த தைப்பூசமானது குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமையில் வருகிறது. இதனால், இந்த தைப்பூசம் இன்னும் கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.
தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரமே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. வரும் 25ஆம் தேதி காலை 9.14 மணி முதல் அடுத்த நாள் ஜனவரி 26ஆம் தேதி காலை 11.07 மணி வரை பூசம் நட்சத்திரம் உள்ளது. இதனால், 25ஆம் தேதியே 10.44 மணி முதல் தைப்பூச தினமான 25ஆம் தேதி இரவு 11.56 மணி வரை தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இது மட்டுமின்றி வரும் 24ஆம் தேதி இரவு பௌர்ணமி திதி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, புகழ்பெற்ற திருப்போரூர் கந்தசாமி கோயிலில் தைப்பூச விழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. தைப்பூச விழாவையொட்டி கோயில் மண்டப வளாகத்தில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளை போற்றும் விதமாக அறுபடை வீடு அரங்குகள் கண்காட்சி, அன்னதானம், பட்டிமன்றம் பரதநாட்டியம், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள், இன்று மாலை முதல், நாளை இரவு வரை நடைபெறுகிறது.
இன்று, மாலை அமைச்சர் அன்பரசன் அறுபடை வீடு அரங்குகள் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். நாளை, காலை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ஒரு நாள் முழுதும் நடைபெறும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். நாளை முழுவதும் இந்த அன்னதானம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








