செங்கல்பட்டைச் சேர்ந்த 5 வயது சிறுவன் Pranav Datta தனது அபார நினைவாற்றல் மற்றும் இந்திய இதிகாசங்கள் குறித்த ஆழ்ந்த அறிவால் பல உலக சாதனைகளை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
மிக இளம் வயதிலேயே ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இந்திய இதிகாசங்கள் தொடர்பான கேள்விகளுக்கு அதிவேகமாக பதிலளித்து, பிரணவ் தத்தா 6 உலக சாதனைகளையும், 2 தேசிய சாதனைகளையும் படைத்துள்ளார். குறிப்பாக, 63 நாயன்மார்களின் பெயர்களை மிக வேகமாக கூறியதற்காக தனித்துவமான உலக சாதனையையும் பெற்றுள்ளார்.
இந்திய கலாசாரம், ஆன்மிக வரலாறு மற்றும் இதிகாசங்கள் குறித்து சிறுவனின் அறிவுத்திறன் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவரது திறமையை பாராட்டி கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
குடும்பத்தினர் கூறுகையில், சிறுவயதிலிருந்தே பிரணவ் புராணக் கதைகள், இறையியல் வரலாறுகள் மற்றும் தமிழ் சைவ சமயப் பாரம்பரியங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்ததாக தெரிவித்தனர். தினமும் பல மணி நேரம் வாசிப்பதும், கேள்வி-பதில் முறையில் பயிற்சி மேற்கொள்வதும் அவரது நினைவாற்றலை வளர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரணவின் இந்த சாதனை, இளம் தலைமுறையினருக்கு இந்திய பாரம்பரியம் மற்றும் ஆன்மிக இலக்கியங்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்ட மக்களும் இந்த சாதனையை பெருமையுடன் கொண்டாடி வருகின்றனர்.





