தமிழகச் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக-வின் ஒரு தரப்பு எம்.எல்.ஏ.-க்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்ததைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) இன்று மிகக் கடுமையான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “பதவி ஆசைக்காக இயக்கத்திற்குத் துரோகம் செய்தவர்கள்” எனத் தன் கட்சிக்குள்ளேயே பிரிந்து சென்றவர்களை அவர் விளாசித் தள்ளியுள்ளார்.
“தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடுதான் மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தனர். ஆனால், மக்களின் அந்தத் தூய தீர்ப்பைச் சிறுமைப்படுத்தும் வகையில், அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரு சில முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.-க்களும் சுயநலத்தோடு தவெக-வுடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்,” என இபிஎஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
தவெக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக நிர்வாகிகளைச் சாடிய அவர், “அமைச்சர் பதவி, வாரியத் தலைவர் பதவி போன்ற சலுகைகளைப் பெற வேண்டும் என்ற பேராசையுடன் அவர்கள் தவெக அரசின் கைப்பாவையாக மாறியுள்ளனர். தங்களது பதவி ஆசைக்காகத் தாய்க்கழகமான அதிமுக-விற்குத் துரோகம் செய்திருப்பவர்கள், தற்போது என்னைப் பற்றி அவதூறு பிரசாரம் செய்து வருவது வேடிக்கையாக உள்ளது,” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
“சுயநலத்துடன் செயல்படும் இந்த முன்னாள் அமைச்சர்களிடமும், துரோகிகளிடமும் அதிமுக நிர்வாகிகளும், உண்மைத் தொண்டர்களும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இவர்களது மாய வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்,” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய பழனிசாமி, “அதிமுக தற்போது வெற்றி வாய்ப்பை இழந்திருக்கலாம். ஆனால், நமது இலக்கு மாறாது. தொண்டர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாகச் செயல்பட்டு, மீண்டும் தமிழகத்தில் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியை அமைத்திட அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம்,” எனத் தனது அறிக்கையில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் தவெக – அதிமுக இடையே ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு மற்றும் இபிஎஸ்-ஸின் இந்த அதிரடி அறிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.





