தமிழகச் சட்டமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக-வின் முன்னணித் தலைவர்களான சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏ-க்கள் குழு முதல்வர் விஜய்யின் தவெக அரசுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். இந்தத் திடீர் நகர்வு அதிமுக தலைமைக்குள்ளேயே பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இரண்டாக உடையும் சூழல் உருவாகியுள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் பதவியேற்றது முதல் அவரோடு இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வந்த சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர், தற்போது ஒரு படி மேலே சென்று தவெக அரசுக்குத் தங்களது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர்.
சமீபத்தில் முதல்வர் விஜய்யைச் சந்தித்துச் சி.வி.சண்முகம் வாழ்த்துத் தெரிவித்திருந்த நிலையில், அது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு அல்ல என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சட்டமன்றத்தில் தவெக-விற்குத் தேவையான மெஜாரிட்டியைத் தாண்டி, ஒரு நிலையான அரசை நடத்த அரசியல் ரீதியான பலம் அவசியம். அதனை வழங்கச் சி.வி.சண்முகம் மற்றும் வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏ-க்கள் குழு முன்வந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
எதிரிக்கு எதிரி நண்பன்” என்ற அடிப்படையில், திமுக-வை வீழ்த்த தவெக-வுடன் சுமுகமான உறவை வளர்த்தெடுப்பதே இவர்களின் தற்போதைய வியூகம் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். இந்த ஆதரவு அறிவிப்பு அதிமுகவின் உட்கட்சி அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், வேலுமணி மற்றும் சண்முகத்தின் இந்த நகர்வு எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு விடுக்கப்பட்ட நேரடிச் சவாலாகப் பார்க்கப்படுகிறது.
ரியான நேரத்தில் சரியான முடிவெடுக்கத் தவறிய தலைமை மாற வேண்டும்” என்ற கோரிக்கை அதிமுகவின் ஒரு பிரிவினரிடையே எழத் தொடங்கியுள்ளது. இது கட்சியின் அதிகாரப்பூர்வத் தலைமையைக் கைப்பற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
நாளை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த எம்.எல்.ஏ-க்கள் குழுவின் வாக்குகள் எந்தப் பக்கம் விழுகின்றன என்பதைப் பொறுத்தே தவெக அரசின் பலம் மட்டுமல்ல, அதிமுகவின் எதிர்காலமும் தீர்மானிக்கப்படும். முதல்வர் விஜய்யைப் பொறுத்தவரை, தனக்குக் கிடைத்துள்ள இந்த எதிர்பாராத பலம் அவரது நிர்வாகத்தை இன்னும் துணிச்சலுடன் முன்னெடுத்துச் செல்ல உதவும்.




